திருகோணமலை – சல்லி அம்பாள் மகா வித்தியாலய மாணவியான “அருட்செல்வன் பிரதீஷா” என்பவர் தேசிய ரீதியான தடகள போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தற்போது, கொழும்பு சுகததாச மைதானத்தில் இடம்பெற்றுவரும் கனிஷ்ட தேசிய தடகள போட்டியில் திருகோணமலை சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தில் இருந்து முதன் முதலாக மாணவர்கள் இருவர் பங்குபற்றி இருந்தார்கள்.
இதில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற 3000m Steeplechase போட்டியில் பிரதீஷா இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதில் பயிற்சி பெற்றுக்கொள்ள தரமான மைதானம் இல்லாது, போட்டிக்குரிய உபகரணங்கள் இல்லாது, கிடைத்த இடத்தில், கிடைத்த பொருட்களைக் கொண்டு அவர் தனது பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
இந்த மாணவிக்கான கெளரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் முரளி தலைமையில் நேற்று( 10) இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினராக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளரான எஸ்.சிறீதரன் மற்றும் ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.