சீனாவில் திருமணமான இளம்பெண் ஒரே நேரத்தில் 20 ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் பண மோசடி செய்து சொகுசாக வாழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மோசடி பெண்ணான Wu (29) என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி தொடர்பில் தெரிய வருகையில்,
Wu காதல் வலையில் வீழ்த்திய ஆண்களை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாக நடித்து, திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் கூட அவர்களுடன் எடுத்து கொண்டிருக்கிறார்.

Wu வை சில காதலர்கள் அவரை மனைவி என்றே அன்பாக அழைத்து வந்திருக்கின்றனர்.
அப்போது தான் தனது பணத்திற்கான கோரிக்கையை தொடங்குவார். அதாவது, தனது தந்தையின் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு, திருமணத்திற்கு பின் வசிக்க வீடு வாங்க, உறவினரை சிறையில் இருந்து எடுக்க பணம் எனக் காரணங்கள் கூறி காதலர்களிடம் பணத்தை கறந்துள்ளார்.
இதை நம்பி பலரும் கடன் வாங்கியும், வீடுகளை விற்றும் Wuக்கு பணம் கொடுத்துள்ளனர். இப்படி 20 பேரிடம் கிட்டத்தட்ட ரூ. 10,80,48,600.00 வரை வாங்கி மோசடி செய்திருக்கிறார்.
Wu-வுக்கு கடந்த 2014ல் திருமணம் ஆகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தான் காதலித்த ஆண்கள் திருமண பேச்சை எடுத்தால் எதாவது ஒரு காரணம் சொல்லி சமாளித்து ஏமாற்றி வந்திருக்கிறார்.

பலநாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்ற வாக்கியங்களுக்கு ஏற்ப தற்போது வசமாக சிக்கியுள்ளார் Wu.
பொலிஸ் விசாரணையில், தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும், ஷாங்காய்க்கு வெளியே வசிக்கும் சகோதரர், சகோதரி மற்றும் பெற்றோருக்கு பண உதவி செய்யவும் இப்படி ஆண்களை ஏமாற்றியதாக கூறி பொலிஸாரையே அதிரவைத்துள்ளார் Wu.
தொடர்ந்து இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.