தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்த தகவலை அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று (16) நடைபெற்ற “தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022” விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொழில்சார் வல்லுநர் சங்கங்கள் சம்மேளத்தின் தலைவர் துலித பெரேரா, தலைமைச் செயலாளர் உபாலி ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.