பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று (10) காலை மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் சென்று ஹம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையில் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவை சேனாதிராஜா, ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோரும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவன், சி.வீ.கே.சிவஞானம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் கி. சேயோன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
குறித்த கையெழுத்து போராட்டம் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.