வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றபோது படகு பழுதடைந்ததால் இலங்கையர்கள் 303 வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கூறிவருகின்றனர்.
எனினும் அவர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தாம் நாடு திரும்ப போவதில்லை என தெரிவித்து, இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டிருந்த நிலையில் குறித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்திற்கு துாதுவராலயம் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 37 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் உயிரிழந்தவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர குடும்பத்தினர் , சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றதாகவும் கூறப்படுகின்றது.